மதுரை அருகே மதுபானக்கூடத்தை சூறையாடி மேலாளர் மற்றும் ஊழியரைத் தாக்கியதாக 50 பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கந்தர்சாவடியில் மதுக்கடை மற்றும் மதுபானக்கூடம் இயங்கி வருகிறது. இவற்றை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மதுபானக்கூடத்தில் மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த திலிப்குமார் (24) மேலாளராகவும், நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பரமகுரு (26) ஊழியராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுபானக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் பணியில் இருந்த போது அங்கு வந்த மர்மக் கும்பல் உணவுப் பொருள்களை சாப்பிட்டு விட்டு பணம் தராமல் செல்ல முயன்றது. இதனால் அவர்களை திலீப்குமார், பரமகுரு ஆகிய இருவரும் தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல், இருவரையும் இரும்புக் கம்பிகளால் தாக்கியது. மேலும் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், பில் இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் சூறையாடி விட்டு தப்பிச் சென்றது. தாக்குதலில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து திலீப்குமார் அளித்தப் புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீஸார், அடையாளம் தெரியாத 50 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.