மதுரையில் காரில் வைத்திருந்த 45 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக அளித்தப் புகாரின்பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பி.என்.பாளையம் பொன்னி நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி ராஜேஸ்வரி(60). சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள குல தெய்வக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். கும்பாபிஷேகம் முடிந்து கோவை செல்லும் வழியில் மதுரைக்கு வந்துள்ளனர். மதுரை கீழவெளி வீதியில் காரை நிறுத்தி விட்டு, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளனர். காரில் ராஜேஸ்வரி மட்டும் இருந்துள்ளார். பாதுகாப்பு கருதி குடும்பத்தினர் 45 பவுன் நகைககளைக் கழற்றி அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். நகைகளை அவர் பையில் போட்டு காரில் வைத்திருந்த சிறிது நேரத்தில் காணாமல் போனதாம்.
காரின் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் நின்றிருந்ததாகவும், நகைள் இருந்த பை காணாமல் போன பின்பு, அந்த நபர்களையும் காணவில்லை என ராஜேஸ்வரி கூறியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அவர் அளித்தப் புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.