உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை வார்டுகளில் உள்ள உள்நோயாளிகளை சந்தித்து, சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா என ஆட்சியர் கேட்டறிந்தார். பின்னர், மருத்துவமனையில் உள்ள கழிவறை மற்றும் மருத்துவமனை வளாகத்தை சோதனையிட்டார். இதில், மருத்துவமனையில் உள்ள கழிவறை சுத்தமில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு, எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மருத்துவமனையில் உள்ள கழிவறைகளுக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு தேவையான தண்ணீரை வழங்கவில்லை என்றால், நகராட்சி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் பாலமுரளி, கோட்டாட்சியர் சுகன்யா, வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர் எல்.ஆர். ராஜன், ஒன்றிய
ஆணையர் பரமசிவம், பொறியாளர் கண்ணன், நகராட்சி ஆணையர் சுப்பையா, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.