தூய்மை சேவை இயக்கத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் அக்டோபர்2 ஆம் தேதி வரை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மை சேவை இயக்கம் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை சேவை இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி தலைமையில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஜி.செந்தில்குமாரி (பொது), நவநீதகிருஷ்ணன் (பஞ்சாயத்து வளர்ச்சி), ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் தூய்மை சேவை இயக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செப்.17-இல் பொதுஇடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு இயக்கம், செப்.18 முதல் 24 ஆம் தேதி வரை பொது இடங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகளில் தூய்மைப் பணி, செப்.25-இல் பூங்கா, பேருந்து நிலையம், ரயில் நிலையகளில் தூய்மைப் பணி, செப்.26 முதல் அக்.1 வரை வழிபாட்டு தலங்களில் தூய்மைப் பணி நடைபெறும். அக்.2-இல் இந்த பிரசார இயக்கத்தின் நிறைவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வலர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் இப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.