முகப்பு
மதுரை

வாடிப்பட்டி அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதல்: சிறுவன், சிறுமி சாவு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:05 AM
பகிர்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.
      கோவை  மாவட்டம், ரத்தினபுரி கண்ணப்பன் நகர் புதுத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் (48). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். 
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அருகே உள்ள இளவரசனூரில் சரவணின் குலதெய்வக் கோயில் உள்ளது. அங்கு நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் பங்கேற்பதற்காக, சரவணன் தனது மனைவி சரண்யா (28), மகன் ஹரீஷ் (15), மகள்கள்  ஹரிணி (10),  சூர்யாஸ்ரீ (6) மற்றும் உறவினர்களான வசந்தா (30), கங்காதேவி (68), பூபதி (30), தியானந்த் (13), சானியா (8) உள்பட 14 பேருடன்  சென்றுள்ளார்.      சனிக்கிழமை இரவு, கோவையிலிருந்து சரவணனுக்கு சொந்தமான வேனில்  கோவில்பட்டிக்கு புறப்பட்டுள்ளனர். வேனை சரவணன் ஓட்டிச் சென்றுள்ளார்.
      மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி கண்மாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, கோபிசெட்டிபாளையத்திலிருந்து மதுரை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.     இதில், வேன் சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் வேனின் இடிபாடுகளில் சிக்கி தியானந்த் (13), சானியா (8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சரவணன், சரண்யா, ஹரீஷ்,  ஹரிணி, சூர்யாஸ்ரீ, வசந்தா, கங்கா, பூபதி ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.    தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வாடிப்பட்டி போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு  ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.    இந்த விபத்து தொடர்பாக, போலீஸார் அரசுப் பேருந்து ஓட்டுநர் பூபதி மீது  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.