பிளஸ் 2-வுக்கு பதிலாக ஐடிஐ படித்த வழக்குரைஞர், பார் கவுன்சிலில் பதிவு கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இந்திய பார் கவுன்சில் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக திருமங்கலத்தைச் சேர்ந்த ஏ.இருளப்பன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நான், 1976-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் வகுப்பு முடித்துவிட்டு, பின்னர் ஐடிஐ படித்தேன். அதன் பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு படித்தேன். பின்னர் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்ட படிப்பு முடித்தேன். இதைத்தொடர்ந்து, அரசு பணியில் இருந்தேன்.
தற்போது நான் வழக்குரைஞர் தொழில் செய்வதற்காக தமிழ்நாடு பார் கவுன்சிலில் விண்ணப்பித்துள்ளேன். ஆனால், பிளஸ்-2வுக்கு பதிலாக ஐடிஐ படித்ததால், எனது பதிவை ஏற்க மறுத்துவிட்டனர்.
பிளஸ் 2 படிப்புக்கு இணையானது ஐடிஐ என உயர்கல்வித்துறையின் அரசாணை உள்ளது. எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எனது விண்ணப்பத்தை ஏற்று பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன், திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக இந்திய பார் கவுன்சில் செயலர், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.