தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி தண்ணீர் லாரியும் முறையாக வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பெத்தானியாபுரம் அண்ணா பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி தண்ணீர் லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் லாரியை மீட்கச் சென்றனர்.
அவர்களையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், தண்ணீர் லாரியையும், அதிகாரிகளையும் பொதுமக்கள் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.