பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை கோரி மனு
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை யாகப்பா நகர் மேற்கு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ஏ. இருளாண்டி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாட்டில்கள், கவர்கள் வடிவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் குப்பையாக கொட்டப்படுகின்றன. இவை பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதனால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை.
பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டால் மண்பானை, அலுமினியப் பொருள்களின் தேவை அதிகரிக்கும். இதன்மூலம் சிறு, குறு தொழில்களும் வளர்ச்சி அடையும். எனவே, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்திக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.