தமிழகத்தில் 510 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள்: பொது சுகாதார இயக்குநர் தகவல்
தமிழகத்தில் கூடுதலாக 510 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 420 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளதாக
தமிழகத்தில் கூடுதலாக 510 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 420 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளதாக மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் கே.குழந்தைசாமி கூறினார்.
அனைவருக்கும் நலவாழ்வுத் திட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மற்ற மாவட்டங்களிலும் அத்திட்டத்தை தமிழகத்தில் விரிவுபடுத்தும் வகையில் வரும் சுதந்திர தினமான ஆக. 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மூலம் தொடங்கிவைக்கப்படும் இத்திட்டத்திற்கான சிறப்பு பயிற்சி மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநர் கே.குழந்தைசாமி பேசியதாவது: அனைவருக்கும் நலவாழ்வுத்திட்டம் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 67 துணை சுகாதார நிலையங்கள், 17 ஆரம்பசுகாதார நிலையங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்துக்கும் கூடுதலாக கிராம செவிலியர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் மூலம் 24 மணி நேர மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திட்டத்தின்படி அனைவருக்கும் தகுதி பாராமல் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்கப்பட்டுவருகிறது. நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, நோய் நீக்கம், மறுவாழ்வு, ஒருங்கிணைந்த சேவை என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழக அரசு 2017-18 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார மாவட்டத்துக்கு ஒரு வட்டாரம் எனும் அடிப்படையில் 39 ஊராட்சி ஒன்றியங்களில் 918 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 184 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ.24.74 கோடி நிதி வழங்கியுள்ளது. அதன்படி பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட 42 சுகாதார மாவட்டங்களில் 985 துணை சுகாதார நிலையங்கள் மத்திய அரசின் உதவியுடன் கிராம நலவாழ்வு மையங்களாக மேம்படுத்தப்படும்.
அத்துடன் 510 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 420 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் 5 கேரவன் மருத்துவமனைகள் நலவாழ்வு மையங்களாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.
கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் முன்னிலை வகித்தார். பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை கூடுதல் இயக்குநர் மருத்துவர் சித்ரா, இணைஇயக்குநர்கள் உமா, தாமரைச்செல்வி, பிரேம்குமார், ஜெரால்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயிற்சி விளக்கவுரையாற்றினர்.