மதுரை அரசு மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு கழிப்பறை, உணவு அருந்தும் கூடம் ஆகியவை விரைவாக கட்டித்தரப்படும் என்று அரசு மருத்துவமனை முதல்வர் டி.மருதுபாண்டியன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அரசு மருந்தியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 56ஆவது தேசிய மருந்தியல் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டி. மருதுபாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மருந்தியல் கல்லூரி முதல்வர் ஹாசன் வரவேற்றார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மருதுபாண்டி, கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார்.விழாவில் தமிழ் நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலப் பொதுச் செயலர் அ. பால்முருகன் பேசுகையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரசு மருந்தியல் கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு கழிப்பறை, உணவு அருந்தும் கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால் மருந்தியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு கழிப்பறை கிடையாது. உணவு அருந்தும் கூடம் கிடையாது. மருந்தியல் மாணவ, மாணவியர் தங்களது மதிய உணவுகளை கல்லூரி வளாகத்தில் திறந்தவெளியில் தான் உண்கின்றனர். பல ஆண்டுகளாக மருந்தியல் மாணவர்களுக்கு கழிப்பறை, உணவு அருந்தும் கூடம் ஆகியவை செய்து தரக்கோரியும், கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இந்த ஆண்டாவது அந்தக்கோரிக்கையை முதல்வர் மருதுபாண்டியன் நிறைவேற்றித்தர வேண்டும் என்றார்.
இதையடுத்து மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு கழிப்பறை, உணவு அருந்தும் கூடம் ஆகியவை கட்டித்தரப்படும் என்று முதல்வர் மருதுபாண்டியன் உறுதி அளித்தார்.