மதுரை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாநகர காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை நகரில் போலீஸ், பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநகர காவல் துறை சார்பாக போலீஸ் பொதுமக்கள் நட்புறவு பொங்கல் விளையாட்டு விழா ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாநகரஆயுதப்படை மைதானத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கும் விழாவை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
விழாவில் கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்கலி, உறி அடித்தல், பலூன் விளையாட்டு, மிதிவண்டி பந்தயம், செங்கல் நடை விளையாட்டு, பந்து விளையாட்டு, எலுமிச்சை கரண்டி விளையாட்டு, சாக்குப்பை ஓட்டம், கைக்குட்டை எடுத்தல், நீர் நிரப்புதல், அதிர்ஷ்ட வட்டம், கோலப்போட்டி என 13 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள பொதுமக்கள் அனைவரையும் மதுரை மாநகர காவல் துறை அழைக்கிறது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மதுரை மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம், நுழைவுக் கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு, மதுவிலக்கு பிரிவு, கூடுதல் காவல் ஆணையர், மதுவிலக்கு பிரிவு - 0452-2523323, 94981-90300, மதுரை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் - 0452-2526600 (83000 01507) என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.