மதுரை அரசு மருத்துமனையில் மருந்துகள் கொள்முதல் செய்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின்பேரில் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்துக்கு புகார்கள் சென்றன. மருத்துவமனையில் மேலும் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு மதுரை அரசு மருத்துவமனையில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முறைகேடுகள் நடந்ததாக தெரிவிக்கப்பட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மருந்து கொள்முதல், உபகரணங்கள், கருவிகள் கொள்முதல், அனைத்துப் பண பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பெற்று, ஆவணங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருந்து கொள்முதல் உள்பட பலவற்றில் முறைகேடுகள் நடந்ததாக பொது சுகாதாரத் துறைக்கு விரிவான புகார் சென்றுள்ளது. புகார் அனுப்பியவர் முறைகேடுகள் தொடர்பாக சில ஆவணங்களையும் அனுப்பியுள்ளார். அதன்பேரில் கடந்த 2 நாள்களாக சோதனை ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழுப் பரிந்துரைக்கும் என்றனர்.