எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2 வழித்தடங்களில் 4 வழிச்சாலைகள் அமைக்கத் திட்டம்: இடங்களை அளவீடு செய்யும் வருவாய்த்துறையினர்
திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் வகையில் இரண்டு வழித்தடங்களில், நான்கு வழிச்சாலைகள்
திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் வகையில் இரண்டு வழித்தடங்களில், நான்கு வழிச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடங்களை அளக்கும் பணியில் கடந்த இரு நாள்களாக வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்காக வருவாய்த்துறையினர் 298.27 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த இடத்தில் உள்ள 67-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் 3 மின்மாற்றிகளை அகற்றும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கூத்தியார்குண்டு விலக்கு (நான்கு வழிச்சாலை) பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையையும், தனக்கன்குளம் மிசோரியர் மில் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையையும் 60 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலைகளாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த இரு சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக அமைப்பது குறித்து விரைவில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக வருவாய்துறை யினர் தெரிவித்தனர்.