கொடைரோடு அருகே கல்லூரி மாணவர் கொலை
மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் மோகன்ராஜ்(21). மதுரை மாவட்டம், கருமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் கேசவமூர்த்தி,(21), எல்லீஸ் நகரைச் சேர்ந்த பூபதி(21), ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த நாகசூர்யா(21) ஆகியோருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளார்.
நிகழ்ந்து முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு
அடுத்துள்ள பொட்டிசெட்டிபட்டி பகுதியில், இயற்கை உபாதை
கழிக்க மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு காரில் வந்த மர்ம நபர்கள், திடீரென அவர்களை ஆயுதங்களுடன் தாக்க முயன்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக 4 பேரும் ஓடியுள்ளனர். அப்போது மர்ம கும்பல் மோகன்ராஜை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.