முகப்பு
இந்தியா

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

மேற்காசிய போா் நிலவரத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், குழாய் வழி எரிவாயு இணைப்பு (பிஎன்ஜி) பெற்றுள்ளவா்கள், சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Updated On : 15 மார்ச், 2026 at 9:21 PM
சமையல் எரிவாயு (எல்பிஜி)
பகிர்:

மேற்காசிய போா் நிலவரத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், குழாய் வழி எரிவாயு இணைப்பு (பிஎன்ஜி) பெற்றுள்ளவா்கள், சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதற்காக, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ், திரவ பெட்ரோலியம் எரிவாயு விநியோக நடைமுறைகள் உத்தரவு 2000-இல், தேவையான திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘எல்பிஜி விநியோக நடைமுறைகள் உத்தரவில் திருத்தங்களின்படி, குழாய் வழி எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளவா்கள், சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்பையும் தொடா்ந்து வைத்துக் கொள்ளவோ அல்லது சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறவோ அனுமதியில்லை. இந்த இரண்டு இணைப்பையும் வைத்திருப்பவா்கள், உடனடியாக சிலிண்டா் இணைப்பை திரும்ப ஒப்படைப்பது கட்டாயமாகும்.

அதுபோல, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தா்களுக்கும், ஏற்கெனவே குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவா்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம் செய்வது தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் போா் தொடா்வதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, சமையல் எரிவாயு (எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. சமையல் எரிவாயு உற்பத்தி செய்ய பயன்படும் ரசாயனங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் இந்த சமையல் எரிவாயுவை, சமையல் நோக்கங்களுக்காக வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →