டிடிவி தினகரன் அணியினரின் புதிய அமைப்பு தொடக்க விழா வரும் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) மேலூரில் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை இரவு தங்கத்தமிழ்செல்வன் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எங்கள் அணியிலுள்ள 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் நாங்கள் ஒரு அமைப்பு பெயரில் இயங்குவதை தில்லி உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் நாங்கள் போட்டியிட்டு அமோக வெற்றிபெற முடியும். அதற்கான தாற்காலிக ஏற்பாடுதான் இப்போது நடக்கிறது. வழக்குகளில் இறுதித் தீர்ப்புக்குப்பின், நாங்கள் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின், அதிமுக பிளவுபட்டது. அதிலும், ஜெயலலிதா வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தார்.
அதேபோல, டிடிவி தினகரன் மேலூரில் நடத்தும் புதிய அமைப்பு அறிமுக கூட்டம் வரலாற்றில் மற்றொரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.
அறிமுக விழா கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், டி.டிவி. தினகரன் அணி நிர்வாகிகள் ஆர்.சாமி, ரங்கசாமி, சாருபாலா தொண்டமான் உள்ளிட்டோரும் பார்வையிட்டனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் அணியிலேயே உள்ளனர்.
மேலூரில் நடைபெறும் அமைப்பு அறிமுக விழாவில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதில், முக்கிய நிர்வாகிகளும் அடங்குவர் என்றார்.