சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மதுரை விமான நிலையத்தில் சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்கள்
மதுரை விமான நிலையத்தில், தென் மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்களைக்
மதுரை விமான நிலையத்தில், தென் மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது, வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ரூ.128 கோடி செலவில், மதுரை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டப்பட்டது. இதன்மூலம், இங்கு ஒரே நேரத்தில் 7 விமானங்களைக் கையாளக்கூடிய வகையிலும், 5 ஆயிரம் பயணிகள் வந்து செல்லக்கூடிய அளவிலும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது, மதுரையிலிருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, புதுதில்லி உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளையும், துபை, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாட்டு சேவைகளையும் சேர்த்து தினமும் 44 முறை விமானங்கள் வந்து செல்கின்றன. மேலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர். இவர்களில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேர் என, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேசுவரம் ஆகிய முக்கியமான சில பகுதிகளை மட்டுமே அறிந்துகொண்டு சுற்றுலாவாக வருகின்றனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை பெரும்பாலானோர் சுற்றுலா வழிகாட்டிகள் மூலமாகவே அறிந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அறியும் வண்ணம், மதுரை விமான நிலையத்தின் வெளிப்புறக் கண்ணாடி சுவர்களில் தென்மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, கொடைக்கானல், குற்றாலம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, திருமலை நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதை காணும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அந்தந்தப் பகுதிகள் குறித்து கேட்டறிந்து சென்று வருகின்றனர். மேலும், இது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை, மேலும் விரிவுபடுத்தும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில், இங்கு தகவல் மையம் அமைக்கும்பட்சத்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து விமான நிலைய வாடகை கார் உரிமையாளர்கள் கூறியது: நான்கு தினங்களுக்கு முன் இந்தப் படங்கள் விமான நிலையத்தின் வெளிப் பகுதியில் ஒப்பட்டப்பட்டன. இதனை காணும் சுற்றுலாப் பயணிகள், அந்த இடங்கள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிகின்றனர். மேலும், சிலர் மதுரைக்குள் இருக்கும் இடங்களைப் பார்க்க உடனடியாக கார்களை வாடகைக்கு எடுத்துச் செல்கின்றனர். இது சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றனர்.