சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: இன்று கொடியேற்றம்
சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (மே 21) கொடியேற்றம் நடைபெறுகிறது.
சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை (மே 21) கொடியேற்றம் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயிலின் முக்கிய விழாவாக வைகாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும் இவ்விழா, ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு அம்மன் திருவீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாளான மே 29-ஆம் தேதி நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், அக்கினிச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்றைய தினம் இரவு வைகை ஆற்றில் பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, மே 30-ஆம் தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், பிற்பகல் 3 மணிக்கு கோயிலில் இருந்து அம்மன் புறப்பாடாகி மந்தைக் களத்தில் எழுந்தருள்வார். பின்னர், அங்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன் பின்னர், இரவு நூதன கோ ரதத்தில் அம்மன் எழுந்தருளி கோயிலை சென்றடைவார்.
விழாவின் 16-ஆம் நாள் நிகழ்ச்சியாக ஜூன் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவமும், பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். ஜூன் 6 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வைகாசித் திருவிழா கொடியிறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நடைபெறும். அன்றிரவு 7 மணிக்கு வைகையாற்றில் அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், அதிகாலை 3 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.