பாரபத்தியில் ஜல்லிக்கட்டு: 49 பேர் காயம்: 700 காளைகள் பங்கேற்பு
திருப்பரங்குன்றத்தை அடுத்த பாரபத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில், 49 பேர் காயமடைந்தனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த பாரபத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில், 49 பேர் காயமடைந்தனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாரபத்தி மந்தைத் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை, வருவாய்க் கோட்டாட்சியர் ஆனந்த், திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இப்போட்டியில் பங்கேற்க, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, காரியாபட்டி, ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 700 மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுபிடி வீரர்கள் 370 பேர் பங்கேற்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மண்டல துணை இயக்குநர் காளிதாஸ் தலைமையில், மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்த பிறகே களத்தில் இறக்கிவிடப்பட்டன. அதேபோல், சுகாதாரத் துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் சிவகுமார் தலைமையில் 9 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மாடுபிடி வீரர்களைப் பரிசோதனை செய்தனர்.
மேலும், போட்டியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 12 மருத்துவர்கள் தலைமையில், செவிலியர்கள், உதவியாளர்கள் என 67 பேர் தயார் நிலையில் இருந்தனர்.
மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு, கட்டில், பீரோ, சைக்கிள், பானை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியின்போது, மாடுபிடி வீரர்கள், காளைகளை கூட்டி வந்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 49 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 5 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட, பாரபத்தி, அவனியாபுரம், வளையங்குளம், கூடக்கோயில், எலியார்பத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.