மேலூரில் சாலை ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்னா
மேலூர் தெற்குத் தெருவில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பெண்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர் தெற்குத் தெருவில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பெண்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை சிறப்புக் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.குணாளன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
மேலூர் வட்டம், தெற்குத் தெரு குலாலர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
அவர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் கோரிக்கை வாசங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் குறிப்பிட்ட 80 குடும்பங்கள் செல்லும் பொதுப்பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
க்ஷ்ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தோம். இதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம் செய்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்நிலையில், அங்கு வந்த தல்லாகுளம் போலீஸார் தர்னாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். பின்னர், அவர்களில் சிலரை குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அழைத்துச் சென்று வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்க வைத்தனர்.
சாலை சீரமைப்பு தாமதம்: மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கனகவேல்பாண்டியன் அளித்த மனுவில், ஐராவதநல்லூர் பகுதி கல்லம்பல் சாலையானது சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு ஜல்லிக்கற்களால் நிரவப்பட்டுள்ளன. சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இச்சாலையை விரைந்து செப்பனிடவேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 316 பேர் மனு அளித்தனர். இதில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
உறுதிமொழி ஏற்பு: முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி, கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அதிகாரி ஆர். குணாளன் தலைமையில் அதிகாரிகள் ஏற்றனர்.