கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் டி. ரவி (56). இவர் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, கோவை மத்திய சிறையில் ரவி அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ரவிக்கு செவ்வாய்க்கிழமை மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிறைத் துறைக் காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ரவி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.