"ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சாதிய பாகுபாடு கிடையாது'
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சாதிய பாகுபாடு கிடையாது என்று ஆர்எஸ்எஸ் தென் தமிழக அமைப்பாளர் ஏ.செந்தில்குமார் கூறினார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சாதிய பாகுபாடு கிடையாது என்று ஆர்எஸ்எஸ் தென் தமிழக அமைப்பாளர் ஏ.செந்தில்குமார் கூறினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் விஜயதசமி விழா பொதுக்கூட்டம் மதுரை ஆனையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:
தேச விரோதிகளை நாட்டில் இருந்து அப்புறப்படுத்தவும், நாட்டில் ஒற்றுமை இல்லாமை, விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளிட்டவற்றை போக்கவே ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று அந்த இயக்கத்திலேயே அத்தகைய நிலை நீடிப்பது வேதனையளிக்கிறது. மதம், கலாசாரம் ஆகியவற்றின் பெருமையை உணராதிருப்பது ஆபத்தானது.
மற்ற மதத்தினர் தங்கள் மதத்தின் புனிதத்தையோ, பழக்க வழக்கத்தையோ மாற்றுவதில்லை. ஆனால், இந்து மதத்தினர் சகிப்புத்தன்மை என்ற பெயரில் தங்கள் மதத்தின் புனிதத்தை காக்கத் தவறுகின்றனர். தேசத்தையும், கலாசாரத்தையும் காக்க வேண்டும் என்ற சிந்தனையுள்ள அனைவருக்கும் பொதுவான இடம் தான் ஆர்எஸ்எஸ். இங்கு சாதிய பாகுபாடுக்கு இடமில்லை. ஆர்எஸ்எஸ்-இல் சேரும் சாதாரண மனிதர்கள் அனைவரும் அசாதாரண மனிதர்களாக மாறுவர். இதற்கு நம் தலைவர்கள் பலர் சான்றாக இருந்துள்ளனர்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் வேற்று மதத்தவராக இருந்தபோதிலும் நம் இந்திய கலாசாரத்தின் மீது பற்றுடன் இருந்தார். மக்கள் அவரை நேசித்ததற்கு அதுவே முக்கியக் காரணம். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கன்னியாகுமரியில் கலாச்சாரம், பண்பாட்டைக் காக்கும் வகையில் ஆன்மிக நிகழ்வுகள் அதிகளவில் நடக்கின்றன. இதனால் அங்குள்ள இளைஞர்களுக்கு நம் கலாசாரத்தின் மீதான ஈடுபாடு குறையாமல் உள்ளது.
இதே நிலை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தொடர வேண்டும் என்றார்.
முன்னதாக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் சசிராமன், ஆர்எஸ்எஸ் மாவட்ட நிர்வாகி நா.ஸ்ரீனிவாசன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத் தலைவர் வி.எஸ்.மணிமாறன், சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா, தொழிலதிபர் அழகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.