காவலர் நினைவு தினம்: காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி
மதுரையில் காவல், ராணுவத்தில் பணியின் போது வீரமரணம் அடைந்தவர்களுக்கான நீத்தார் நினைவு தினத்தையொட்டி
மதுரையில் காவல், ராணுவத்தில் பணியின் போது வீரமரணம் அடைந்தவர்களுக்கான நீத்தார் நினைவு தினத்தையொட்டி மாநகர காவல் ஆணையர், தென் மண்டல காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடையும் ராணுவம் மற்றும் காவல்துறையினரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 -ஆம் தேதியன்று நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது . இதையொட்டி மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு தின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மாநகர காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், தென் மண்டல காவல்துறைத் தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்க வேல், மாநரகக் காவல் துணை ஆணையர் சசிமோகன், ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாநகர காவல், ஊரகக்காவல் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, ஊர்காவல் படை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
மேலும் வீரமரணம் அடைந்தவர்களின் தியாகத்தை கௌரவிக்கும்பொருட்டு காவலர் அணிவகுப்புடன் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.