குழந்தை பருவ புற்று நோய்கள் எளிதில் குணப்படுத்தக்கூடியவை: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
குழந்தைப்பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை உடனடியாக கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை உடனடியாக கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் மருத்துவமனையின் குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை குருதியியல் சிகிச்சை நிபுணர் ந.ஜெயபோஸ் சிறப்புரையில் பேசியது: புற்றுநோயை முன்னதாகவே கண்டறிந்து உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உலகிலுள்ள மொத்த குழந்தை புற்றுநோயாளிகளில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 2010-இல் குழந்தைப்பருவ குருதியியல் மற்றும் புற்றுநோயியல் துறை தொடங்கப்பட்டது. இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 800 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வயது வந்தவர்களுக்கான புற்றுநோய் போல இல்லாமல், குழந்தைப்பருவ புற்றுநோய்கள் அதிகளவில் குணப்படுத்தக்கூடியவை. மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 75 சதவீதம் குழந்தைகள் குணமடைந்துள்ளனர். இங்கு சிகிச்சைப்பெற்றுள்ள குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ஏழ்மையான பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுகிற மற்றும் ஏழை குழந்தைகளின் நலனுக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இயங்கி வரும் கமீலா குழந்தைகள் புற்றுநோய் நிதியத்திலிருந்து உதவி செய்யப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் குருதியாக்க ஸ்டெம்செல் துறைத்தலைவர் டி.காசி விஸ்வநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். இதில் புற்றுநோயிலிருந்து மீண்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்று சிகிச்சை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். புற்றுநோயிலிருந்து மீண்டு, தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.