இரண்டாம் கட்ட திருக்குறள் திருப்பயணத்தை கரூரில் விரைவில் தொடங்க இருப்பதாக பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் எம்.பி.யும், திருக்குறள் ஆர்வலருமான தருண் விஜய், மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருக்குறள் கற்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் இந்தி, உருது, பஞ்சாபி, வங்க மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருக்குறளை நாடு முழுவதும் பரப்பும் விதமாக இரண்டாம் கட்ட திருக்குறள் திருப்பயணம் கரூரில் தொடங்கி காசியில் நிறைவு பெறுகிறது என்றார். அவருடன் பாஜக நிர்வாகிகளும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.