கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தென்னமநல்லூர் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அப்பகுதியினர் வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தென்னமநல்லூர் விரிவாக்கப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், நகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்புப் பகுதிக்குள் விடப்படுகிறது என்றும், இங்குள்ள பாழடைந்த கிணற்றில் அதிகளவில் குப்பைகள் சேர்ந்துள்ளதால், இதனை மூடக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்டோர் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.