மதுரையில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த இளைஞர் 5 பேர் கொண்ட கும்பலால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆறுமுகம்(22). இவர் சொந்தமாக செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறார். இவர் மீது செல்லிடப்பேசி திருட்டு , ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன. வழக்கு சம்பந்தமாக புதூர் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு ஆறுமுகம் புதூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், 5 பேரும் வேனில் ஏறித் தப்ப முயன்றனர். அதில் ஒருவர் நிலைத் தடுமாறி வேனில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் விரைந்து சென்று, அவர் தப்பிச் சென்று விடாமல் தடுத்து பிடித்தார். மற்ற 4 பேரும் தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த புதூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலைச் சம்பவத்தில் பிடிபட்டவர் புதூர் மங்கலக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(28) என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. கடந்த வருடம் தினேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இக் கொலைச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனக் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.