மதுரை அருகே வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதி ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திருச்சியைச் சேர்ந்தவர் குணசேகரன் (31), மதுரையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பணிமுடிந்து இரு சக்கர வாகனத்தில் மதுரையில் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பெருங்குடி விலக்கு அருகே, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் குணசேகரன் சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மதுரைக்கு போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.