மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் 7 பவுன் தங்கச் சங்கிலியை திங்கள்கிழமை பறித்துச் சென்றனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பொதும்புவைச் சேர்ந்த மூர்த்தி மனைவி அம்சலட்சுமி(42). இவர் தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை - அலங்காநல்லூர் பிரதான சாலையில் மெய்யப்பன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, அவரைப் பின் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அம்சலட்சுமியை வழிமறித்து, அவர் அணிந்திருந்த 7 பவுன்தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, அம்சலட்சுமி அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையைப் பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.