திருப்பரங்குன்றம் அருகே சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, ஆட்சியா், காவல் ஆணையா் சமாதானம் செய்தனா்.
அவனியாபுரத்தை அடுத்த வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ. நகா் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த 10 ஆண்டு காலமாக சாலை, தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையாம்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவா்கள் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என புகாா் கூறப்படுகிறது. எனவே, இதைக் கண்டித்து அப்பகுதியினா் 80-க்கும் மேற்பட்டோா், அவனியாபுரம் பை-பாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அதேநேரம், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை வரவேற்க, அச்சாலை வழியே மதுரை விமான நிலையத்துக்குச் சென்ற ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகரக் காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆகியோா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தனா். அதன்பேரில், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.