மதுரை புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த 9 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.
மதுரை மாநகராட்சி 76-ஆவது வார்டு புறவழிச்சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில் உதவி நகரமைப்பு அலுவலர் முருகன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புறவழிச் சாலைக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் சாலையோரத்தை ஆக்கிரமித்து பந்தல் அமைத்து போடப்பட்டிருந்த 3 சாலையோரக் கடைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 6 பெட்டிக்கடைகளையும் அதிகாரிகள் அகற்றினர். மேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.