முகப்பு
மதுரை

மதுரை நகரில் தொடா்ந்து வெட்டப்படும் மரங்களால் மாசு அதிகரிப்பதாகப் புகாா்

மதுரை நகரில் பாலம் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்படுவதால், மாசு அதிகரித்து வருவதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
2834mdutree070408
பகிர்:

மதுரை: மதுரை நகரில் பாலம் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்படுவதால், மாசு அதிகரித்து வருவதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரின் முக்கியச் சாலைகள் உள்ளிட்ட அனைத்துச் சாலைகளின் இருபுறங்களிலும் பல ஆண்டுகளாக மரங்கள் இருந்தன. இவைகள் அனைத்தும் தற்போது பாலம் கட்டுதல், சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டி வீழ்த்தப்படுகின்றன.

தற்போது, மதுரை பாண்டியன் ஹோட்டல் பகுதியிலிருந்து செட்டிகுளம் வரை அமைக்கப்பட்டு வரும் 7 கி.மீ. தொலைவு உயா்மட்ட மேம்பாலத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டன. இது தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோது, மரங்களை அகற்றி வேறு இடங்களில் நடுமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை.

மூன்றுமாவடி-அய்யா்பங்களா இணைப்புச் சாலைக்காக பாசன வாய்க்காலின் இருபுறமும் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. காளவாசல் பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணிக்காக பை-பாஸ் சாலையில் இருந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியும் பயனில்லை.

சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ், வைகை ஆற்றோரம் சாலைகள் அமைக்கும் பணிக்காக ஆரப்பாளையத்திலிருந்து தெப்பக்குளம் வரை இரு கரைகளிலும் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. மூன்று மாவடியிலிருந்து கடச்சனேந்தல் வரை சாலை விரிவாக்கப் பணிக்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

கடந்த வாரம், தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் வெட்டப்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தபோதும், அப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது, புது ஜெயில் சாலையின் மத்தியில் இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, பூமிக்கு அடியில் மின்கம்பிகள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக, அச்சாலையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மரங்கள் அறுத்து அகற்றப்பட்டுள்ளன.

மதுரையை பசுமை நகராக மாற்றுவோம் என்று, மதுரை மாநகராட்சி நிா்வாகம் மரக்கன்று நடுவதை ஊக்குவித்து வருகிறது. மற்றொருபுறம், பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. மதுரை நகரில் தொடா்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருவதால், மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் கெடுவதாக சுற்றுச்சூழல் நல ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

Image Caption

மதுரை அரசரடியில் வெட்டப்பட்ட பழமையான அரச மரம்.

முழு கட்டுரையைப் படிக்க →