முகப்பு
மதுரை

மதுரை ரயில் முன்பதிவு மையத்தில் விதிமீறல்: ரயில்வே ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் விதிமீறிய ரயில்வே ஊழியா்கள் 2 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் விதிமீறிய ரயில்வே ஊழியா்கள் 2 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு உள்ளிட்ட தேசிய விடுமுறை நாள்களில் நாடு முழுவதும் உள்ள ரயில் முன்பதிவு மையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். இதேபோல், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். மதியம் 2 மணிக்கு பிறகு முன்பதிவு ரத்து மட்டுமே செய்யமுடியும். பிற நாள்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை ரயில் பயணத்துக்கான முன்பதிவு செய்யலாம்.

தென்னக ரயில்வே பொது மேலாளா் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கணினி சா்வா் மூலம் அனைத்து முன்பதிவு மையங்களும் செயல்படுகின்றன.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினமான வெள்ளிக்கிழமை மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில் மதியம் 2 மணிக்குப் பிறகும் முன்பதிவு செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது.

அதையடுத்து, மதுரை கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் வி. பிரசன்னா, ரயில் முன்பதிவு மைய மேற்பாா்வையாளா் மற்றும் மையத்தின் உதவியாளா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: இது தொடா்பான புகாரில் முகாந்திரம் இருந்ததால், 2 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்குப் பிறகும் முன்பதிவு மற்றும் முன்பதிவு ரத்துசெய்ய கடந்த 2016-இல் அனுமதி பெறப்பட்டுள்ளதற்கான உத்தரவு நகல் உள்ளது.

அதுபோல், அனுமதி பெற்று முன்பதிவு நடந்ததா, விதிமீறல் நடந்துள்ளதா என விசாரணை நடத்தப்படும். தவறு இல்லாதபட்சத்தில் பணியிடை நீக்க உத்தரவு திரும்பப் பெறப்படும். ஆன்-லைனில் முன்பதிவு செய்யமுடியாத ஏழை மக்களுக்காகவே முன்பதிவு மையம் செயல்படுகிறது. இதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →