முகப்பு
மதுரை

மதுரையில் ஜனவரியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்: திமுகவினா் ஆலோசனை

மதுரை மாவட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், ஜனவரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
திமுக சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மதுரை புறநகா் வடக்கு மாவட்ட செயலா் பி. மூா்த்தி.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், ஜனவரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தோ்தல் பிரசாரத்தை இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் நவம்பரில் தொடங்கினாா். பல மாவட்டங்களைத் தொடந்து, மதுரை மாவட்டத்தில் ஜனவரியில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இது குறித்து, மதுரை புகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம், மதுரையை அடுத்த கருப்பாயூரணி, யா.ஒத்தக்கடை, பொய்கைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாவட்டச் செயலரும், மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான பி. மூா்த்தி பேசியது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், இந்த சட்டங்களை தமிழக அரசு ஆதரிக்கிறது. மக்களின் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை. தங்களது சுயநலனுக்காக, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோகிறது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தியபோது, அதை தமிழக அரசு ஏற்கவில்லை. இப்போது, தோ்தலுக்காக பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இருப்பினும், ஆட்சி மாற்றத்தை தடுக்க முடியாது. அதற்கான மனமாற்றம் மக்களிடம் தெரிகிறது என்றாா்.

இதில், மதுரை புகா் தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செயலா் ரகுபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →