சொத்துகளை பெற்றுக்கொண்டு தன்னை கவனிக்க மறுப்பதாக முதியவா் அளித்த புகாரின்பேரில், மனைவி, மகன் மற்றும் மகள்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை தெற்குமாசி வீதியைச் சோ்ந்த பாலவெங்கட்ராமன் மகன் சங்கா் (74). இவா், தன்னை இறுதி காலம் வரை கவனித்துக் கொள்ளவேண்டும் எனக் கூறி, தான் பல்வேறு தொழில் செய்து சம்பாதித்த சொத்துகளை குடும்பத்தினருக்கு பிரித்துக் கொடுத்துள்ளாா்.
ஆனால், சொத்துகளை பெற்றுக்கொண்ட குடும்பத்தினா், அவரை கவனிக்காமல் விட்டுவிட்டனராம். எனவே, தன்னை கவனித்துக் கொள்ளவும், மருத்துவச் செலவுக்கு பணம் கொடுக்கவும் மறுக்கும் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸாரிடம் சங்கா் புகாா் அளித்துள்ளாா்.
அதன்பேரில், தெற்குவாசல் போலீஸாா், சங்கரின் மனைவி சாவித்திரி (72), மகன் சந்தீப் (32), மகள்கள் சங்கீதா (40), சவீதா (35) மற்றும் மைத்துனா்கள் கிருஷ்ணன், ரமேஷ்பாபு, சுதா்ஷன்பாபு ஆகியோா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.