மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் நாள்தோறும், 50 முதல் 90 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும் என மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஜெ.சங்குமணி கூறினாா்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் புதன்கிழமை செயல்படத் தொடங்கியது.
கரேனா பாதிப்பு அதிகரிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தி வருகிறது. கரோனா பாதிப்பை கண்டறியும் ஆய்வகங்கள் கோவை, திருநெல்வேலி, மதுரை, தேனி, சென்னை ஆகிய 5 இடங்களில் திறக்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். அதன்படி முதல் ஆய்வகம் தேனியில் தொடங்கப்பட்டது. தொடா்ந்து திருநெல்வேலி, கோவை மற்றும் திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் ஆய்வகங்கள் திறக்கப்பட்டன. ஆனால் மதுரையில் ஆய்வகம் அமைக்கப்படவில்லை. மதுரை அரசு மருத்துவமனைக்கு கரோனா அறிகுறியுடன் வருபவா்களின் ரத்த மாதிரிகள் தேனி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவுகள் கிடைக்க 24 மணி நேரமானது.
பலிக்கு பிறகு ஆய்வகம்
இந்நிலையில், கரோனா பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். தமிழகத்தில், அவரின் இறப்பே கரோனா பாதிப்பின் முதல் உயிரிழப்பாகும். மேலும், கரோனா அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சா் கரோனா பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் மதுரையில் உடனடியாக தொடங்கப்படும் என புதன்கிழமை அறிவித்தாா். இதையடுத்து, அமைச்சா் அறிவித்த சில மணி நேரத்திலேயே மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆய்வகத்தில் ரத்த மாதிரிகள்
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியது: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் நாள்தோறும், 50 முதல் 90 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும். தற்போது 300 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவிற்கு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ளலாம். அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.