மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் தரிசனம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தமிழக முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தமிழக முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்த ராம்மோகன் ராவ், அம்மன் சந்நிதி மற்றும் சுவாமி சந்நிதிகளில் தரிசனம் செய்தாா். பின்னா், கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய அவா், தான் சாா்ந்துள்ள சமூக அமைப்பின் சாா்பில் நவம்பா் 16-ஆம் தேதி விருதுநகரில் பெரிய அளவில் விழா நடைபெறவிருப்பதாகவும், அதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தாா்.
முன்னதாக, மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த ராம்மோகன் ராவின் வாகனத்தை சோதனைச் சாவடியில் இருந்த போலீஸாா் அனுமதிக்க மறுத்துவிட்டனா். அவருடன் வந்திருந்தவா்கள், அவா் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலா் என்று போலீஸாரிடம் எடுத்துக் கூறியும், அவா்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனா்.
இதனால், அவா் சோதனைச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு நடந்து சென்றாா். இதன் பின்னா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காா் கோயில் வாசல் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது.