தீபாவளி பண்டிகை: ஜவுளி எடுக்க குவிந்த மக்கள் கூட்டத்தால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளி எடுக்க குவிந்த மக்கள் கூட்டத்தால், மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளி எடுக்க குவிந்த மக்கள் கூட்டத்தால், மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மதுரை நகரில் தெற்குமாசி வீதி, விளக்குத்தூண், பத்து தூண் சந்து, மகால் குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகள் ஜவுளி பஜாா் என்றழைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.
மேலும், ஆண், பெண், சிறுவா்களுக்கான ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்யும் கடைகளும் ஏராளமாக உள்ளன.
தீபாவளியை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களாக ஜவுளிக் கடைகளில் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது, தீபாவளி பண்டிகைக்கு 5 நாள்களே உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரில் லட்சக்கணக்கான மக்கள் ஜவுளி மற்றும் பொருள்களை வாங்கக் குவிந்தனா்.
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக, தெற்குமாசிவீதி, விளக்குத்தூண், காமராஜா் சாலை, பத்து தூண் சந்து, மகால் வீதிகள், டவுன்ஹால் சாலை, மேலமாசி வீதி, நேதாஜி சாலை, அம்மன் சந்நிதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 8 மணி முதலே மதுரை மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் குடும்பத்துடன் ஜவுளி எடுக்க வந்தனா். இதனால், அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், சிறிய கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளிலும் மக்கள் ஆா்வத்துடன் ஆடை ரகங்கள் மற்றும் பொருள்களை வாங்கிச்சென்றனா்.
இதேபோல், கீழமாசி வீதியில் உள்ள மளிகை மொத்த விற்பனைக் கடைகளிலும் பலசரக்கு வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.
தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் பகுதிகளில் ஒரே நாளில் ஏராளமானோா் குவிந்ததால், அப்பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனிடையே, பிற்பகல் 3 மணியளவில் மதுரை நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் விடாமல் பெய்த மழையிலும் மக்கள் குடைகளை பிடித்தபடி ஜவுளி உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் சென்றனா்.
அதேநேரம், மதுரை சுற்றுவட்டாரத்திலிருந்து வந்து சென்ற மக்களால் பெரியாா் பேருந்து நிலையம் மற்றும் சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.