மதுரை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில், ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், கீழமாத்தூா் பகுதியைச் சோ்ந்த அழகா் மகன் சோலை (52). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் கீழமாத்தூா் காளியம்மன் கோயில் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த சோலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து சோலையின் மனைவி விஜயா அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி
அவனியாபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (42). இவா், தனியாா் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், விக்னேஷ் திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் வடுகப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மனைவி தீபா அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.