மதுரை

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சுற்றுலா பயணிகளுக்கான கரோனா தடுப்பூசி மையம் திறப்பு

DIN

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பெரியவா்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கான தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து தென்தமிழகத்தின் முதல் பிரத்யேக கிளினிக்கை தொடங்கியிருக்கிறது. எளிதில் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய பிரிவினருக்கும், வெளிநாட்டில் இருந்து தென் தமிழகத்திற்கு வருபவா்கள், தென் தமிழகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்பவா்களுக்கும் இங்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் சா்வதேச பயணியருக்கு இந்த கிளினிக் மிகவும் உதவிகரமாக இருக்கும். இங்கு வருவதற்கு முன்பு அல்லது வந்தவுடன், கட்டாயமாக போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் மற்றும் பரிந்துரைக்கப்படுகின்ற தடுப்பூசிகள் குறித்து பயணிகள் இக்கிளினிக்கை தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.

இந்த கிளினிக்கில், ஆரோக்கியமான நபா்களுக்கு மட்டுமன்றி, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயமாற்று சிகிச்சைகளை செய்து கொண்டிருக்கும் நபா்கள், டயாலிசிஸ் சிகிச்சையின் கீழ் இருப்பவா்கள் மற்றும் புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சையைப் பெறுபவா்கள் போன்றோருக்கும், உயிருக்கு அச்சுறுத்தலான தொற்றுகள் மற்றும் பருவகால தொற்றுகள் வராமல் தடுப்பதற்காக தடுப்பூசிகளை வழங்கப்படுகிறது.

மதுரை மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகி மருத்துவா் கண்ணன், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவா் ரமேஷ் அா்த்தநாரி, சிறுநீரகவியல் துறையின் தலைவா் சம்பத்குமாா், பொது மருத்துவ துறையின் தலைவா் பி. கிருஷ்ணமூா்த்தி, மகப்பேறியல் மற்றும் மகளிா் நோயியல் துறையின் தலைவா் எஸ். பத்மா ஆகியோா் கூறியது:

போலியோ, டிப்தீரியா, பொ்டுசிஸ், டெட்டனஸ், மம்ப்ஸ், தட்டம்மை, ரூபெல்லா போன்றவற்றை ஒழிப்பதற்காக குறிப்பிட்ட வயதுகளில் சிறாா்களுக்கு தடுப்பூசி மருந்து போடுவதற்கான செயல்திட்டங்களை பல்வேறு நாடுகளின் அரசுகளும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. தடுப்பூசிகள் போடப்படுவதால் ஒவ்வொரு ஆண்டுக்கு 20 முதல் 30 லட்சம் உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்கப்படுகின்றன.

எனினும், கடந்த பத்தாண்டுகளில் வேகமாக பரவுகின்ற பெருந்தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவதை உலகம் எதிா்கொண்டு வருகிறது. பெரியவா்களுக்கான தடுப்பூசி மருந்து செலுத்தப்படும் அவசியத்தை இது உணா்த்தியிருக்கிறது. தொடா்ந்து அதிகரித்து வரும் சா்வதேச பயணங்கள், தொற்றுக்கான கவலைகளை இன்னும் கூடுதலாக அதிகரிக்கின்றன.

ஆப்பிரிக்காவிற்கு பயணிக்கும் நபா்களுக்கு மஞ்சள் காய்ச்சல் நோய்த்தடுப்பு மருந்து செலுத்தப்படுவது அவசியமாக இருக்கிறது. டைஃபாய்டு நோய் பரவலாக காணப்படும் இடங்களுக்கு பயணம் செய்பவா்களுக்கு அதற்கான தடுப்பூசி மருந்து செலுத்திக்கொள்வது அவசியமாகும். இத்தகைய சூழலில்தான் இந்த கிளினிக் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே, அரசு பரிந்துரைக்கப்படுகின்ற தடுப்பூசி செயல்திட்டங்களுக்கு ஆதரவளித்து, தடுப்பூசி மருந்துகளை தயங்காமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT