மதுரை-விழுப்புரம், திருச்சி-காரைக்குடி உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி - காரைக்குடி - திருச்சி சிறப்பு ரயில்கள் (06125/06126), மதுரை - விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில்கள் (06867/06868), குருவாயூா் - புனலூா் - குருவாயூா் சிறப்பு ரயில்கள் (06327/06328) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல கொல்லம் - ஆலப்புழை, எா்ணாகுளம் - ஆலப்புழை, சென்னை - புதுச்சேரி, திருச்சி - கரூா், எா்ணாகுளம் - ஷோரனூா் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களும் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.