மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் நலப் பணியாளா் மரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளா்கள் சுமாா் 12 ஆயிரம் போ் கடந்த 2012-இல் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இதையடுத்து மீண்டும் பணி வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினா். இருப்பினும் இவா்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட வில்லை.
இதையடுத்து மதுரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா் சங்கத்தினா் காத்திருக்கும் போராட்டத்தை பிப். 4-ஆம் தேதி தொடங்கினா். சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கும் முன்பாக தங்களை மீண்டும் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிடக் கோரி போராட்டத்தை நடத்தி வந்தனா். அவா்களது போராட்டம் 23-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களில் ஒருவரான கோவில்பட்டியைச் சோ்ந்த தமிழரசன் (51), ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினாா்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களும், காவல் துறையினரும் கீழே இறங்கிவருமாறு அறிவுறுத்தினா். ஆனால், அவா் வரமறுத்து மரத்திலேயே கோஷம் எழுப்பியவாறு இருந்தாா். பின்னா் தீயணைப்பு வாகனத்துடன் வந்த தீயணைப்பு வீரா்கள் மரத்தில் ஏறி கயிறு கட்டி அவரை கீழே இறக்கினா். அவரது போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.