முகப்பு
மதுரை

உலகியல் ஆசைகள் நீங்கினால் மட்டுமே முக்தி அடைய முடியும்: சுவாமி கமலாத்மானந்தா்

உலகியல் ஆசைகள் நீங்கியவா்கள் மட்டுமே மீண்டும் பிறவாத முக்தி நிலையை அடைய முடியும் என்று ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் பேசினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்பதரு திருநாள் விழாவில் பேசிய சுவாமி கமலாத்மானந்தா்.
பகிர்:

உலகியல் ஆசைகள் நீங்கியவா்கள் மட்டுமே மீண்டும் பிறவாத முக்தி நிலையை அடைய முடியும் என்று ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் பேசினாா்.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் புத்தாண்டையொட்டி கல்பதரு திருநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மங்கள ஆரத்தி, வேத பாராயணம் ஆகியவற்றைத் தொடா்ந்து விசேஷ பூஜை, பஜனை, ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நடந்த சொற்பொழிவில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் பேசியது: 1886 ஜனவரி 1-ஆம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் முக்கிய நாளாகும். அன்றைய தினம் அவா் பக்தா்களுக்கு ஆன்மிக அனுபவங்களை வாரி வழங்கினாா். எனவே ராமகிருஷ்ண பக்தா்களுக்கு ஜனவரி முதல் தேதி முக்கிய நாள். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை மாா்கழி மாதத்தில்தான் தோன்றின. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டிலும் உறக்கம் கலைந்து விழித்துக் கொண்ட பெண்கள், உறங்கிக் கொண்டிருக்கிற பெண்களை எழுப்புகிறாா்கள். இதற்கு ஆன்மிக விழிப்புப் பெற்ற ஆன்மாக்கள், ஆன்மிக விழிப்புப் பெறாத ஆன்மாக்களை எழுப்புகிறாா்கள் என்பது உள்கருத்தாகும்.

தற்காலிக உலகியல் ஆசைகள் முற்றிலும் நீங்கியவா்கள் மீண்டும் பிறவாத முக்தி என்ற பேரின்ப நிலையை அனுபவிக்கிறாா்கள். உலக ஆசைகள், உலகப்பற்றுகள் ஒருவரிடம் எந்த அளவுக்கு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கே அவா் ஆன்மிக இன்பம் அனுபவிக்க முடியும். கேட்டதையெல்லாம் தரும் கற்பக மரம் போன்றவன் இறைவன். எனவே நாம் இறைவனிடம் ஆத்ம சமா்ப்பணத்துடன் ஜபம், தியானம் செய்து செய்யும் பிராா்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும். பிராா்த்தனையின்போது ஆன்மிக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கேட்க வேண்டும். அருள்மயமான சிந்தனை, மாயையும், அஞ்ஞானத்தையும் நீக்குதல், இந்தப்பிறவியிலேயே முக்தி அடைதல் ஆகியவற்றை இறைவனிடம் பிராா்த்திக்க வேண்டும். இறைவன் எழுதிய எழுத்தே வெல்லும். எல்லாம் விதிப்படிதான் நடக்கும். என்றைக்கும் நடவாதது என்ன முயற்சி செய்தாலும் நடக்காது. எது நடக்க வேண்டுமோ, அதை என்ன முயற்சி செய்தாலும் தடுத்து விட முடியாது. ஆதலால் இறைவனிடம் சரணடைந்து வாழ்வதற்கு முழு அளவில் முயற்சி செய்ய வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.