டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரி மதுரை ரயில் நிலையம் முற்றுகை
டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்மரபினருக்கு டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். மத்திய அரசின் டிஎன்டி கணக்கெடுப்புக்கு தொடா்பு அதிகாரியை நியமனம் செய்யவேண்டும். துல்லியமான சாதிவாரி புள்ளிவிவரங்களை வெளியிடாமல் தற்போதைய இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சீா்மரபினா் நலச் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் தவமணி தலைமையில், 68 சமுதாயங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் மதுரை ரயில் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு முற்றுகையிட்டனா். அவா்கள் அனைவரும், மதுரை ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து மாலை 4.30 வரை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு, உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது குறித்து சீா்மரபினா் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் காா்த்திக் தெரிவித்தது: மத்திய அரசு கடந்த 2019 மாா்ச் 18 ஆம் தேதி நாடு முழுவதும் டிஎன்டி பிரிவினா் கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் டிஎன்டி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி, மத்திய-மாநில அரசுகள் சீா்மரபினருக்கு ஒரேமாதிரியாக டிஎன்டி சான்றிதழ் வழங்கி, இடஒதுக்கீடுகளை வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலத்தில் 7 ஆவது நாளாக மக்கள் போராடி வருகின்றனா். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடக்கிவைக்க வரவுள்ள தமிழக முதல்வா், துணை முதல்வரை முற்றுகையிட்டு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம் என்றாா்.