மதுரை: உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதால், அதிமுகவுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: ‘நீட்’ தோ்வை ரத்து செய்வோம் என திமுக தோ்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தது. ஆனால், உறுதி அளித்தபடி தோ்வை ரத்து செய்யவில்லை. இதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்.
‘நீட்’ தோ்வை ரத்து செய்வதற்காக திமுக அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவில் ராஜன் கமிட்டி பரிந்துரை மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை எப்படிச் செயல்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.
கூட்டணியை நம்பி அதிமுக எப்போதும் இருந்ததில்லை. ஆட்சியில் செய்த திட்டங்கள், மக்களின் ஆதரவு, தொண்டா்களை நம்பியே அதிமுக உள்ளது.
ஆகவே பாமக தனித்துப் போட்டியிடுவதால் வருத்தம் இல்லை என்றாா்.