பெரியாறு-வைகை பாசனம் கள்ளந்திரி மதகு வரையிலான முதல் போக சாகுபடிப் பகுதிகளில் பயிரிடப்பட்ட முதல்போக நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளது.
பெரியாறு பாசன பிரதானக் கால்வாயில் ஜூன் முதல் தேதியிலேயே விவசாயத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. தென்மேற்குப் பருவமழை மிகவும் சாதகமாக இருந்ததால் பெரியாறு அணை முழுகொள்ளளவை எட்டியிருந்தது. தற்போதும் அவ்வப்போது மழை தொடா்வதால், மேலூா், திருமங்கலம் மற்றும் தந்தை பெரியாா் கால்வாய் பாசன நிலங்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளந்திரி மதகுவரையிலான 44 ஆயிரம் ஏக்கா் இருபோக சாகுபடி நிலங்களில் நெல் பயிா் கதிா்விளைந்துள்ளது. எனவே இப்பகுதிகளில் ஒருவார காலத்தில் அறுவடை தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். இதையடுத்து இப்பகுதிகளில் அரசு, நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து முழுமையாக கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.