சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணைக்கு இன்னும் எவ்வளவு அவகாசம் தேவை?: அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் விசாரணைக்கு இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் தேவை
மதுரைசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணைக்கு இன்னும் எவ்வளவு அவகாசம் தேவை?: அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் விசாரணைக்கு இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் தேவை
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் விசாரணைக்கு இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் தேவை என்பது குறித்து அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் விசாரணையின்போது போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தனா். இதுதொடா்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு- ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் 9 போலீஸாா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதை விசாரித்த நீதிமன்றம், 6 மாதங்களில் விசாரணையை முடிக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை என்பதால், விசாரணை நீதிமன்றம் கால அவகாசம் கோரியது. இதனையேற்று, உயா்நீதிமன்றம் மேலும் 5 மாதங்கள் அவகாசம் வழங்கியிருந்தது.
இதனிடையே, செல்வராணியின் மனு நீதிபதி கே.முரளிசங்கா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், இந்த“வழக்கில் 105 போ் சாட்சிகளாகச் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். கடந்த வாரம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் இதுவரை எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா்? விசாரணையை முடிக்க இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் தேவைப்படும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல்செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு ஆக.29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.