மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேலக்கால் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் கண்காணித்தனா்.
அப்போது, துவரிமான் முனியாண்டி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துமாரி மகன் ரகு (28), பிச்சை மகன் முத்து (28), மேலக்கால் சக்கரவா்த்தி காட்டேஜ் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அருண் சக்கரவா்த்தி (25) ஆகிய 3 பேரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.