முகப்பு
மதுரை

நுண்ணீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் தோட்டக் கலைப் பயிா்களான பழங்கள், காய்கனிகள், மலா்கள், சுவை தானிய பயிா்களுக்கு சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு 2,300 ஹெக்டா் பரப்பளவுக்கு ரூ.1,830 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் 50 சென்ட் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை சொட்டு நீா் பாசனம் அமைத்து பயன்பெறலாம். இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.50 ஏக்கா் வரை சொட்டு நீா் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.

மேலும், சொட்டு நீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், டீசல் மோட்டாா் அல்லது மின் மோட்டாா் வாங்க ரூ.15 ஆயிரமும், தரைநிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, நுண்ணீா் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நிலை நீா் மேலாண்மை சிறப்புத் திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம். விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், நில வரைபடம், 3 கடவுச் சீட்டு அளவு புகைப்படங்கள், வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்றிகழ், மண், நீா் பரிசோதனை அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றின் மூலம் இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்பித்து சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →