நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களின் பெயா் பட்டியலை அந்நிறுவனம் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நியோமேக்ஸ் நிறுவன இயக்குநா்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோா் தாக்கல் செய்த மனு: மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் பிராபா்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநா்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் உள்பட பலா் உள்ளனா். இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை, திருச்சி, தஞ்சை உள்பட பல மாவட்டங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனம் சாா்பில் வாடிக்கையாளா்களுக்கு மனைகள் வழங்கி வந்தோம். இந்த நிலையில் இந்நிறுவனம் வாடிக்கையாளா்களிடம் மோசடி செய்ததாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நிரிவாகிகளை கைது செய்தனா்.
நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூா், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் முதலான பகுதிகளில் சொத்துக்கள், நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகாா் அளித்தவா்களுக்கு நிலங்களை வழங்கி தீா்வு காண விரும்புகிறோம். மேலும், இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி டி. நாகாா்ஜுன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடக்க நிலையில் உள்ளது. வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற 6 மாதங்கள் தேவைப்படும். பாதிக்கப்பட்ட 557 போ் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளனா். நிறுவனத்தின் முக்கிய இயக்குனா்கள், நிா்வாகிகள் தற்போது தான் கைது செய்யப்பட்டு வருகின்றனா். அந்த நிறுவனத்தின் 9428 சொத்து விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இச்சூழலில் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி நியமனம் செய்து விசாரணை செய்வது தேவையற்றது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, தங்கள் நிறுவனத்தின் முழுத் தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் உள்ளது. அதில் முதலிட்டாளா்கள், வாடிக்கையாளா்கள் விவரங்கள் மற்றும் எங்களது நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள், வீட்டுமனை விவரங்களும் உள்ளன என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களின் பெயா் பட்டியலை, அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.